அந்தமான் தீவுப் பகுதிகளில் கடல் உணவுதான் பிரதானம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக கட்லி மீன், நண்டுகள், இறால்கள் போன்றவை மிகவும் சுவையாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. பல நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்கிறார்கள். உள்ளூர்வாசிகள் குறைவான இடத்தில் நெல், தென்னை போன்ற பயிர்களை விளைவிக்கின்றார்கள். இதனால் அரிசிதான் இங்கு முதன்மையான உணவு என்று கருதப்படுகிறது. அதோடு தேங்காய், மா, வாழைப்பழம், அன்னாசி பழம் போன்றவைகளும் இங்கே அதிகம் விளைகின்றது. அந்தமானிலுள்ள பெரும்பாலான உணவகங்களில் தென்னிந்திய, பெங்காலி, ஆந்திர வகை உணவுகள் சுவையாகக் கிடைக்கின்றன. நம் ஊர் மாஸ்டர்களே பெரும்பாலும் சமைக்கின்றனர். தேங்காய் மசாலா வகைகள், தேங்காய் எண்ணெயில் பொறிப்பது என உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதற்கு கேரள உணவு வகைகள் மிகவும் வழிகாட்டி என சொல்லலாம். தீவில் உள்ள பாரம்பரிய பழங்குடி சமூகத்தின் உணவுகள் அசைவம் மற்றும் பழங்களே பிரதானம் என்று சொல்லலாம். இங்குள்ள பெரும்பாலான தீவுகளில் அவர்கள் தங்கள் உணவை எவ்வாறு சமைக்கிறார்கள் என்பதை பற்றி அதிகம் தெரியவில்லை. நவீன நாகரிக சமூகங்களைப் போல் அல்லாமல் அந்தமான் தீவுப் பழங்குடிகள் தங்களின் உணவை இன்னமும் வேட்டையாடித்தான் உண்கின்றார்கள். இந்த உணவில் ஆமைகள், காட்டுப் பன்றி, மீன்கள் மற்றும் தீவுகளுக்குள் இருக்கும் ஊர்வன, விலங்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சிகளும் அடங்கும். பெரும்பாலும் நெருப்பைப் பயன்படுத்துவது இங்கு நடைமுறையில் இல்லை. அவ்வாறு பயன்படுத்தினாலும் கூட அது இறைச்சியின் சுவையை மேம்படுத்துவது இல்லை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. வடக்கு சென்டினல் தீவு மக்கள் பச்சை இறைச்சியை சாப்பிடுகிறார்கள். காட்டுத் தேன், கிழங்கு வகைகளை சேமித்து வைக்கிறார்கள். மற்றபடி அரிசி உணவு, டீ குடிப்பது போன்ற உணவு வகைகளை இங்குள்ளதுபோல் பயன்படுத்துகின்றனர். உணவை வேக வைத்து சாப்பிடுவது, நெருப்பில் சுட்டும், அனலில் வாட்டியும் சமைத்தும் சாப்பிடுவது என்பது இவர்களின் பிரதான விருப்பமாக உள்ளது.